
Thiru. Aru. Sankaralingam
அன்பிற் சிறந்தீர், வணங்குகிறேன்
மனிதர்கள் வாழும் இவ்வுலக இயக்கம் பல திறப்பட்ட பணிகளை ஆற்றுபவர்களைப் பொறுத்தே அமைகிறது. விஞ்ஞானிகள் நாம் உறங்கும் போது, ஆய்வகங்களில் கண் துஞ்சாது மனிதர்கள் நாகரிகத்தில் மேம்பட, நேற்றைய வாழ்வை விட இன்றைய வாழ்வு இன்பம் நிறைந்ததாக ஆக்கிட தன் ஆழ்ந்த அறிவின் மூலம் புதிய கண்டிபிடிப்புகளை வழங்குகிறார்கள் .
சட்ட மேதைகளோ ஒவ்வொரு தனிமனிதனும் இயற்கை தனக்களித்திருக்கும் இன்பத்தை அனுபவிக்கும் உரிமைக்கு ஊறு நேராவண்ணம் அவனுக்கு வேலி அமைத்துதருகிறார்கள்.
காவல் துறையினரோ தனி மனிதனின் உயிருக்கும் உடைமைக்கும் உத்திரவாதம் அளிக்கிறார்கள்.
உடல் நலம் காக்கும் மேதையரோ தங்களின் பரந்து பட்ட பட்டறிவின் மூலம் நோயற்ற வாழ்வை நாம் வாழ வகை செய்கிறார்கள்.
சர்வகலா சாலைகளில் கற்ற மேதைகள் சிலர் அரசியல்வாதிகளாக மாறும் போது பெருந்தலைவர் போன்று அமைந்து விட்டால் சமூகத்தில் ஒவ்வொரு மனிதனாலும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
இப்போது ஆர அமர்ந்து சிந்திக்கத் தொடங்குங்கள்.
விஞ்ஞானிகள், சட்ட மேதைகள், மருத்துவ மேதைகள், அரசியல் தலைவர்கள்
ஆனால் இவர்களை அவர் தம் உயரிய நிலைக்கு உருவாக்கிய ஒரு தன்னலமற்ற ஒரு தியாகக்கூட்டம் ஒளிந்து கொண்டிருக்கிறதே அவர்கள் யார்?
ஆம். அவர்கள் தான் நமது எழுத்தறிவிக்கும் இறைவர்கள் ஆன ஆசிரியர்கள்! ஆசிரியர்கள் இல்லாத உலகத்தை சற்றே நினைத்துப்பாருங்கள் .எனவே ஆசிரியர்கள் கற்றது தனக்கேயானாலும் நாம் அவர்களிடம் நம் இல்ல மழலைச்செல்வங்களை அறிவுச் செல்வங்களாக ஆக்கும் கடமையைச் செய்ய வேண்டும்.
இருபத்தைந்தாம் ஆண்டுவிழாவின் போது நம் பள்ளி நாற்றங்காற் பருவத்தின் போது பள்ளித் தலைமை ஏற்ற திருமதி. பிஜோயா தாஸ் M.A., D.T.Ed., B.Ed., அவர்களின் அற்புத சேவையையும், அவர் விட்டயிடத்தை நிரப்பிய அறிவின் ஊற்று திருவாட்டி . சுதா எம். ஏ ., எம். எட் ., அவர்களின் கல்விச்சேவையையும் நன்றிப் பெருக்கோடு நம் அன்பைக்காணிக்கையாக்குகிறோம்.
மேலும் இன்றுஇப்பணியினை தொடர்ந்து திருமதி சூடாமணி கோவிந்தராஜன் M.Sc., M.Ed., அவர்கள் தலைமையாசிரியை பொறுப்பேற்று பள்ளியை மேலும் சிறப்புற செவ்வனே நடத்திக் கொண்டு செல்கின்றவர்க்கு எங்கள் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
திரு டி.எஸ்.டி இராஜாவின் கருத்திலே ' கலைவாணி வித்யாலயா' வாக உருவாகி திரு சுருளிவேல் B.Sc.,B.L., அவர்களின் ஆளுமையில் ஒப்படைக்கப்பட்ட பள்ளி பின்னர் டி.எஸ்.டி இராஜாபெண்கள் மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளியாக வளர்ச்சிப்பெற்று இன்று வெள்ளிவிழா கொண்டாடுகிறது ‘Discipline through knowledge’ ‘ஒழுக்க வழியில் அறிவுப்பெருக்கு’ என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இயங்கும் பள்ளி அரிமா நடை நடந்து பயணிப்பதாக!